அரச ஊழியர்களிற்கும், பொலிஸாருக்கும் இடையில் முறுகல். : இருவர் கைது.

வவுனியா – மன்னார் வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அரச ஊழியர்களிற்கும், பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக நகரசபை உறுப்பினர் உட்பட மேலும் ஒருவரை பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.

வவுனியா மன்னார் வீதி நெளுக்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளினை பெற்று கொள்வதற்காக கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக இரவு பகல் பாராது அரச உத்தியோகத்தர்கள் ஒரு வரிசையிலும், பொதுமக்கள் ஒரு வரிசையிலும் காத்திருந்தனர்.
 
இந்நிலையில் ஐம்பதிற்கும் மேற்பட்ட பொலிஸார் தமக்கான புதிய வரிசையினை உருவாக்கி எரிபொருளினை பெறும் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.
 
மேலும் பொலிஸார் தங்களிற்கான எரிபொருளினை பெற்ற பின்னரே அரச ஊழியர்கள் பெற முடியும் என தெரிவித்தமையால் அரச ஊழியர்களுக்கும், பொலிஸாருக்கும்  இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்ததுடன் இது தொடர்பாக பொலிஸாருடன் வினவிய நகரபை உறுப்பினர் பாரி மற்றும் அரச உத்தியோகத்தர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

இதேவேளை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகிக்கும் போது பொலிஸார் அதிகளவில் விசேட முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளினை பெற்று செல்வதனால் தங்களிற்கான எரிபொருளினை பெறுவதற்கு பல நாட்களிற்கு மேலாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.