ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்களின் வங்கிகளில் கோடிக்கணக்கில் பணம். போலீசார் திடுக்கிடும் தகவல்.

நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் சமூக ஆர்வலர் பெத்தும் கேர்ணலை கைது செய்ய போலீசார் தேடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் தற்போது அவரை காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பழங்கால பொருட்கள் திருடப்பட்டு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்தை எரித்து, ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, பிரதமர் அலுவலகம் ஆகியவற்றுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் சுமார் எழுபது சந்தேக நபர்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர்கள், சமூக வலைத்தளங்களில் நேரலையில் காட்சிகளைக் காட்டி மக்களைத் தூண்டியவர்களில் பெரும்பாலானவர்கள் அரசியல் கட்சிகளுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.  

இதேவேளை, காலி முகத்திடல் போராட்ட இடத்தில் தொடர்ந்தும் போராட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் மூவர் தமது வங்கி கணக்கிலிருந்து நான்கு கோடி 50 லட்சம் ரூபாய் எடுத்துள்ளமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த மூன்று நபர்களும் இலங்கை வங்கியின் யூனியன் பிளேஸ் கிளையில் மூன்று புதிய கணக்குகளை அண்மையில் ஆரம்பித்துள்ளனர்.

அந்தக் கணக்குகளில் கடந்த 15ஆம் திகதி வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் தலா 150 லட்சம் ரூபாய் வீதம் 450 இலட்சம் ரூபாவை வைப்பிலிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பணம் வைப்பிட்ட சிறிது நேரத்தின் பின்னர் இந்த வங்கி கணக்குகளுக்கு தொடர்புடைய மூன்று பேர் வெள்ளை நிற பிரியஸ் மோட்டார் வாகனத்தில் வங்கிக்கு வந்துள்ளனர்.

அவர்கள் வந்து கணக்குகளில் இருந்த முழுத் தொகையையும் எடுத்துச் சென்றதுடன், வழக்கமான நடைமுறைப்படி பணத்தைப் பெற்றதற்கான காரணத்தை கேட்ட வங்கி அதிகாரிகளையும் அவர்கள் மிரட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

தாங்கள் போராட்டத்தில் இருப்பதாகவும், தங்களுக்கு இடையூறு செய்தால் நாளை மறுநாள் வங்கியை முற்றுகையிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.