இலங்கையின் கடன் நெருக்கடிக்கு நிவாரணம்   – ஜி-20 நாடுகள் தீர்மானம்

இலங்கை உள்ளிட்ட கடன் நெருக்கடியில் தவிக்கும் நாடுகளுக்கு நிவாரணம் வழங்க ஜி-20 நாடுகள் முடிவு செய்துள்ளன.

இந்தியாவின் பெங்களூரில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை உட்பட குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளுக்கு நிவாரணம் வழங்கக் கூடிய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி தீர்வுகளை காண வேண்டியது அவசர தேவை என குறிப்பிடப்படுகின்றது.

கடன் நெருக்கடியைத் தீர்க்கவும், கடன் அழுத்தத்தில் உள்ள நாடுகளை எளிதாக்கவும் உத்தியோகபூர்வ இருதரப்பு மற்றும் தனியார் கடன் வழங்குநர்களின் பலதரப்பு ஒருங்கிணைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜி-20 கூட்டம் கவனம் செலுத்தியுள்ளது.

ஜி-20 நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் சந்திப்பின் பின்னர், சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் Kristalina Georgieva, இலங்கையின் கடனைத் தீர்ப்பது தொடர்பான பொதுவான கட்டமைப்பின் கீழ் சரியான நேரத்தில் மற்றும் ஒழுங்கான செயல்முறை தேவை என்று தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர், கடன் மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பில் ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகள் பொதுவான உடன்பாட்டை எட்ட வேண்டிய அவசரத் தேவையையும் சுட்டிக்காட்டியுள்ளார்.