காலி முகத்திடல் ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள்.

கொழும்பு – காலி முகத்திடல் பகுதியில் தற்போது ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பகுதியில் அண்மையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக திறக்கப்பட்டு இருந்த ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் வீதிக்கு தற்போது வீதித் தடை போடப்பட்டு அந்த வீதி மூடப்பட்டுள்ளது.

இதேவேளை போராட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கருத்து தெரிவிக்கையில், ரணில் விக்ரமசிங்க பின்கதவால் வந்து ஜனாதிபதியாகி தற்போது போராட்டக்களங்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். மக்களின் ஜனநாயக உரிமையை அவரால் மீற முடியாது. ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட அரச கட்டடங்களுக்கு யார் வந்திருக்கிறார்கள் என்பதை பார்த்து வழக்கு போடுவதற்கு பார்க்கிறார்கள்.

மக்களின் ஜனநாயக உரிமைகளை உங்களால் மீற முடியாது. பின்கதவால் வந்த ரணில், இளைஞர்களையும் மக்களையும் அடக்குவதற்கு நாம் விட மாட்டோம் என தெரிவித்துள்ளார்.