சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 51பேர் கைது!!

திருகோணமலையில் இருந்து சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முற்பட்ட 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று (ஜூலை 03, 2022) கிழக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 51 பேரை ஏற்றிச் சென்ற உள்ளூர் இழுவை படகு கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் இந்த மோசடியில் ஈடுபட்ட 06 பேர் உட்பட 41 ஆண்கள், 05 பெண்கள் மற்றும் 05 குழந்தைகள் உள்ளனர். சந்தேகநபர்களுடன், இந்த சட்டவிரோத செயலுக்கு பயன்படுத்தப்பட்ட மீன்பிடி கப்பலும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கம்பஹா மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 05 முதல் 56 வயதுக்குட்பட்டவர்களாவர். அவர்கள் திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படவுள்ளனர்.