சவுதி சென்ற மனைவி சித்திரவதை  – கணவன் தற்கொலை!

வீட்டு வேலைக்காக சவுதி சென்ற மனைவி கொடூர துன்புறுத்தல் மற்றும் சித்திரவதைக்கு ஆளாகியதன் காரணமாக கணவன் உயிர்மாய்த்த  துயரச்சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

தம்புள்ளை அலகொலவெவ என்ற துார பிரதேசத்தில் வசித்து வந்த 4 பிள்ளைகளின் தந்தையான 44 வயதுடைய நபரே நேற்று முன்தினம் இரவு இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குடும்பப் பொருளாதாரச் சிரமம் காரணமாக இவரது மனைவி புஷ்பா குமாரி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் திகதி வீட்டு வேலைக்காக சவுதி அரேபியா சென்றுள்ளார்.

தம்புள்ளை நகரில் அமைந்துள்ள தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் ஊடாகவே அவர் சவுதி சென்றிருந்தார்.

இது குறித்து புஷ்ப குமாரி கூறுகையில்,

அந்த வீட்டின் முதலாளி தன்னை வேறு 04 வீடுகளில் வேலைக்கு அமர்த்தி  பணம் சம்பாதிக்கும் பணியில் ஈடுபட்டார்.

தான் அவ்வப்போது மனிதாபிமானமற்ற சித்திரவதைகளை சந்திக்க நேரிட்டதாகவும், வீட்டு உரிமையாளரின் மகன் தன்னை தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனை வீட்டின் உரிமையாளரிடம் கூறியதையடுத்து, 15 நாட்களுக்கும் மேலாக உணவின்றி அறையில் அடைக்கப்பட்டதாகவும், கழிவறையில் தண்ணீர் குடித்து தான் வாழ்ந்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் சவுதியில் உள்ள தனது சகோதரியிடம் தான் அனுபவித்த சித்ரவதை பற்றி கூறியுள்ளார்.

இதனையடுத்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், சவுதி தூதரகம் மற்றும் சவூதி பொலிஸாருக்கு சகோதரி தகவல் வழங்கியுள்ளார்.

அங்கு சவுதி பொலிஸாரின்  தலையீட்டால் புஷ்ப குமாரி சிறை வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்டிருந்தார்.

02 மாத சம்பளத்தை பெற்றுக்கொண்டு தனது சகோதரியின் தலையீட்டில்  இலங்கை திரும்பியதாக அவர் தெரிவித்துள்ளார்.

சவூதியில் நடந்த சித்திரவதைகளை தன் குழந்தைகள் மற்றும் கணவரிடம் இருந்து மறைத்துவிட்டு தனது சகோதரியிடம் மட்டுமே அவர் கூறியுள்ளார்.

பின்னர் சம்பவம் தொடர்பில் தம்புள்ளை பொலிஸாருக்கும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தம்புள்ளை அலுவலகத்துக்கும் தெரியப்படுத்தியதையடுத்து, அவர் தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு பல தடவைகள் அறிவித்த போதும் அவர்கள் உரிய கவனம் செலுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு சென்றதன் பின்னர் நடந்த அனைத்தையும் தனது கணவரிடம் தெரிவித்ததாகவும் அவர் மிகவும் மனமுடைந்ததாகவும் புஷ்ப குமாரி குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கணவர் கடுமையாக முயன்றார். ஆனால் உரிய பதில் கிடைக்காததால் அவர்  உயிர்மாய்த்துக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.