ஜெயக்குமார் கண்பார்வையை இழந்தால் திமுக அரசாங்கம் பொறுப்பேற்குமா? – சீமான்   கண்டனம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி 32 ஆண்டுக்கால சிறைவாசத்துக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட ஜெயக்குமார், திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார்.
அவருக்கு கண்பார்வை குறைபாட்டால் சிகிச்சை செய்யப்பட்டபோது, விரைந்து அதை முடிக்கக்கோரி உளவுத்துறையினர் நெருக்கடி கொடுத்திருக்கின்றனர். அதனால் அவசரகதியில் மருத்துவம் செய்யப்பட்ட ஜெயக்குமாருக்கு, பார்வைத்திறன் மேலும் மோசமடைந்திருக்கிற செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தற்போது சென்னை, எழும்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்றுவரும் ஜெயக்குமாருக்கு இந்தநிலை ஏற்படக் காரணமான அரசு அதிகாரிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் என்னுடைய கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.

மருத்துவ சிகிச்சைக்குக்கூட போதிய காலநேரம் அளிக்காது, நெருக்கடி அளித்ததன் விளைவாகவே ஜெயக்குமாருக்கு தற்போது கண்பார்வை பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது மறுக்கவியலா உண்மை. முறையற்ற சிகிச்சையால் ஒருவேளை அவர் கண்பார்வையை இழந்தால், அதற்கு யார் பொறுப்பேற்பது… தி.மு.க அரசு ஏற்குமா… ஆறு தமிழர்களும் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டபோதும், சுதந்திரக்காற்றைச் சுவாசிக்கவிடாது, சிறப்பு முகாம் எனப்படும் சித்திரவதைக்கூடத்தில், அவர்களில் நால்வரை அடைத்துவைத்து, கடும் நெருக்கடிகளையும், உளவியல் ரீதியான அழுத்தங்களையும் கொடுத்துவரும் தி.மு.க அரசின் தொடர் செயல்பாடுகள், ஏற்கவே முடியாத பெருங்கொடுமை.

தண்டனைப் பெற்று சிறையிலிருக்கும் ஒரு சிறைவாசிக்குக் கொடுக்கப்படும் குறைந்தபட்சமான உரிமைகளும், வாய்ப்புகளும்கூட மறுக்கப்பட்டு, சிறப்பு முகாமில் அவர்களை அடைத்துவைத்திருப்பது அப்பட்டமான மனித உரிமை மீறல். 32 ஆண்டுகளில் மொத்த இளமைக்காலத்தையும் சிறைக்கொட்டடிக்குள் தொலைத்துவிட்டு, உடலியல் சிக்கல்களோடும், மனஉளைச்சலோடும் வெளிவந்திருக்கும் அவர்களை எஞ்சியிருக்கும் வாழ்க்கையையாவது மனஅமைதியோடு வாழ வழிவிடுவதே மனிதநேயமாகும். அதனால், சிறப்பு முகாமிலிருந்து அவர்களை மாற்றிடத்தில் தங்க வைப்பதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

அதற்கிடையே, திருச்சி சிறப்பு முகாமுக்குள் அவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கெடுபிடிகளைத் தளர்த்தி, குறைந்தபட்சமாக சுதந்திரமான ஒரு பொதுவெளியை உருவாக்க வேண்டுமெனவும் கோருகிறேன். இத்தோடு, மாவட்ட ஆட்சியர், உளவுத்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தாலும், நெருக்கடியினாலும் கண்பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட ஜெயக்குமாருக்கு ஏற்பட்ட பாதிப்பைச் சரிசெய்ய வேண்டியது அரசின் தார்மீகக்கடமை என்பதையும் நினைவூட்டுகிறேன். மேலும், ஜெயக்குமார் கண்பார்வைத்திறன் குறைபாட்டைச் சரிசெய்ய உயர்தர சிகிச்சையளிக்க உடனடியாக அரசு ஏற்பாடு செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.