தாய்லாந்தில் கோட்டா. ; 17 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு மற்றும்  தீ வைப்பு

தாய்லாந்தில் 17 இடங்களில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு மற்றும் தீ வைப்பு சம்பவங்களால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

யாலா, நாரதிவட் மற்றும் பட்டானி ஆகிய மாகாணங்களில், நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை தாக்குதல்கள் தொடர்ந்துள்ளன.

சம்பவத்தில் குறைந்தது 7 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் குறித்த பிராந்தியங்களின் பொருளாதாரத்தை சீர்குலைப்பதை நோக்கமாகக் கொண்டிருந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

ஒரே நேரத்தில் 17 இடங்கள் தாக்கப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பட்டாணி பிரதேசத்தில் இரண்டு தாக்குதல்களும், யாலாவில் ஆறு தாக்குதல்களும், நாரதிவட்டில் ஒன்பது தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளன.

பட்டானியின் – நோங் சிக்கில் உள்ள எரிபொருள் நிலையமொன்று தீயினால் முற்றாக நாசமாக்கப்பட்டது.

இந்தத் தாக்குதல்கள் வெளிப்படையாக ஒருங்கிணைக்கப்பட்டவை என்றும், குறிப்பாக எரிபொருள் நிரப்பு நிலையங்கள், வர்த்தக நிலையங்கள், தொலைதொடர்பு கோபுரங்கள் போன்ற இடங்களில் இந்த வெடிப்பு மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் பாதுகாப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.