தொலைபேசியை கொள்ளையிட்ட பிக்கு.

நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமையில் தமது விகாரைக்கு தானம் கிடைப்பதில்லை எனக்கூறி திஸ்ஸமஹாராம நகரில் பிச்சை பாத்திரத்தை ஏந்தி தானம் பெற்று வந்த பிக்கு ஒருவர் வர்த்தக நிலையம் ஒன்றுக்கு சென்று அங்கிருந்த பெறுமதியான தொலைபேசி ஒன்றை கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனக்கு சொந்தமான 45 ஆயிரம் ரூபா பெறுமதியான தொலைபேசி காணாமல் போயுள்ளதாக வர்த்தகர் ஒருவர், திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதையடுத்து விசாரணைகளை நடத்திய பொலிஸார் பிக்குவை கைது செய்துள்ளதுடன் காணாமல் போன  தொலைபேசியை பிக்குவிடம் இருந்து கைப்பற்றியுள்ளனர்.

கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய இந்த பிக்கு தனமல்வில பிரதேசத்தில் உள்ள விகாரையை சேர்ந்தவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.

பிக்கு நேற்று நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.