நாடு முழுவதும் கட்டுமானப் பணிகள் மந்தம்.

2022 ஜூன் வரையிலான ஆறு மாதங்களில் நாட்டின் மொத்த சீமெந்து பயன்பாடு 19 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.

இது கட்டுமான நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள சுருக்கத்தின் ஆழத்தையும் அதன் மூலம் நாட்டின் மொத்த பொருளாதார உற்பத்தியில் ஏற்படும் தாக்கத்தையும் பிரதிபலிக்கிறது.

2022 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 8.4 வீதம் சுருங்கியதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் கடந்த மூன்று காலாண்டுகளில் கட்டுமான பணிகள் சுருங்கியமை காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் தமது பணிகளை இழந்துள்ளனர்.

அதன்படி ஜூன் வரையிலான ஆறு மாதங்களில், நாட்டின் மொத்த சீமெந்து பயன்பாடு 19 சதவீதம் குறைந்து 2,855,000 மெட்ரிக் தொன்னாக இருந்தது என்று மதிப்பீடுகள் தெரிவித்துள்ளன.

இதேவேளை நாடு எதிர்கொள்ளும் கடுமையான அந்நியச் செலாவணி பற்றாக்குறையை பிரதிபலிக்கும் வகையில், ஜூன் மாதத்தில் சீமெந்தின் இறக்குமதி 84 சதவீதம் சரிந்து வெறும் 35,000 மெட்ரிக் தொன்னாக இருந்தது.

அத்துடன் ரூபாவின் கடும் வீழ்ச்சி காரணமாக சீமெந்தின் விலையும் ஓரிரு மாதங்களில் பல மடங்கு உயர்ந்தது.

இதனால் நாடு முழுவதும் கட்டுமானப் பணிகள் கடுமையாக மந்தமடைந்தன.