நெத்திலி உள்ளிட்ட கருவாடுகளின் விலையில் மாற்றம்.

இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்து வந்ததுடன் நெத்திலி உள்ளிட்ட கருவாடுகளின் விலைகளும் அதிகரித்து காணப்பட்டது.

கடந்த ஆறு மாதங்களாக காணப்பட்ட இந்த நிலையில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கருவாடு இறக்குமதியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆறு மாதங்களுடன் ஒப்பிடும் போது கருவாடுகளின் விலைகள் 35 வீதத்தில் இருந்து 40 வீதம் வரை குறைந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

உள்நாட்டில் கொள்வனவு செய்யப்பட்ட உலர் மீன்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உலர் மீன்களின் கையிருப்பை சரியான முறையில் பேணப்பட்டமை உட்பட பல காரணங்களினால், கருவாடுகளின் விலைகள் கணிசமாக குறைந்துள்ளதாகவும் இலங்கை கருவாடு இறக்குமதியாளர்கள் சங்கம் கூறியுள்ளது.