நெல்லை விற்பனை செய்ய முடியவில்லை. ;  வவுனியா விவசாயிகள் கவலை.

சிறந்த விலை இன்மை மற்றும் நெல்லை கொள்வனவு செய்ய எவரும் ஆர்வம் செலுத்தாமையினால் நெல்லை விற்பனை செய்ய முடியாத நிலை காணப்படுவதாக வவுனியா கொக்குவெளி மற்றும் பேயாடி கூழாங்குளம், ஒயார்சின்னக்குளம் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில்  விவசாயிகள்  கருத்து தெரிவிக்கையில்,

தற்போது சிறுபோக அறுவடை இடம்பெற்று வரும் நிலையில் ஒரு ஏக்கருக்கு 30 மூடை என்ற ரீதியில் விளைச்சல் கிடைக்கின்றது.

எனினும் நெல் ஆலை உரிமையாளர்களோ, வெளிமாட்டங்களில் இருந்தோ நெல்லை கொள்வனவு செய்வதற்கு எவரும் வராத நிலை காணப்படுகின்றது.

டீசல் பிரச்சினையே காரணமாக உள்ளது. இதனால் நிர்ணய விலை வவுனியாவில் காணப்படவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த முறை சேதன பசளையினை பயன்படுத்தி செய்த போதிலும் விளைச்சல் குறைவாக காணப்பட்ட போதிலும் 10 ஆயிரம் ரூபா வீதம் ஒரு மூடை விற்பனை செய்திருந்தோம். இம்முறை 40 ஆயிரம் ரூபாவுக்கு இரசாயன பசளை பொட்டு செய்கையில் ஈடுபட்ட போதிலும் கொள்வனவாளர்கள் இன்மையால் நல்ல விலை கிடைக்கவில்லை. நெல்லையும் விற்பனை செய்ய முடியாமல் இருக்கின்றது.

5900 மற்றும் 6900 என்ற ரீதியில் நெல்லை சிலர் கொள்வனவு செய்தாலும் 15 முதல் 20 நாட்கள் கழித்தே பணத்தை தருகின்றனர்.  என விவசாயிகள் தெரிவித்தனர்.
 
அதேவேளை நெல்லை விற்பனை செய்ய நெல் ஆலைகளுக்கு கொண்டு சென்றாலும் அவர்கள் நெல் வேண்டாம் என்கின்றார்கள் அதனால் திருப்பி கொண்டு வர வேண்டிய நிலை உள்ளது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.