பண்டிகைக் காலங்களில் வீதியோரங்களில்  பொருட்களை விற்பனை செய்ய அனுமதி.

பண்டிகைக் காலங்களில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீதி இருப்பு பகுதிகளில் பொருட்களை விற்பனை செய்வதற்கு தற்காலிகமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,பல உற்பத்தியாளர்கள் தமது பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதன் காரணமாக, சுயதொழில் செய்யும் சிறு மற்றும் வீட்டுத் தொழில் முனைவோர் பண்டிகை காலங்களில் சாலையோரங்களில் இருந்து தங்கள் பொருட்களை இலவசமாக விற்பனை செய்ய தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வீதி இருப்புக்கள் தொடர்பில் ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட பிரதேசங்களில் குறித்த பிரதேச செயலாளரின் அனுமதி மற்றும் மேற்பார்வையுடன் நிரந்தர நிர்மாணங்களை மேற்கொள்ளாமல் உற்பத்தியாளர்கள் தமது பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

மஹரகம உட்பட பல இடங்களில் ஆடைகள் விற்பனைக்காக இவ்வாறு விசேட இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டின் ஏனைய அனைத்துப் பகுதிகளிலும் தற்காலிகமாக சுயதொழில் செய்யும் உற்பத்தியாளர்கள் பண்டிகைக் காலம் முடியும் வரை தமது பொருட்களை நுகர்வோருக்கு விற்பனை செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.