பாடசாலையில் மாணவி திடீரென உயிரிழப்பு

புத்தளம், மணல்குன்று பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் பாடசாலையில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

புத்தளம், மனகுண்டுவ பகுதியைச் சேர்ந்த 12 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பாடசாலை மணியடித்ததையடுத்து சமய அனுஷ்டானத்திற்காக வகுப்பறையில் இருந்து விளையாட்டு மைதானத்தை நோக்கி ஓடும் போது மாணவி தரையில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது திடீரென கீழே விழுந்த மாணவிக்கு அதிபர், ஆசிரியர்கள் முதலுதவி வழங்கிய போதிலும், வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும் வழியிலேயே மாணவி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு உயிரிழந்த மாணவி, 11 பேரைக் கொண்ட குடும்பத்தின் 9 ஆவது பிள்ளை எனவும்,அவர் எவ்வித நோய்களினாலும் பாதிக்கப்படவில்லை எனவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.