பாடசாலை மாணவி மீது காதலன் கத்திக்குத்து.

இன்று (08) காலை மினிபே, ஹசலக்க,  மொறயாவில் உள்ள பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த சிறுமியை நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார்.

பின்னர் தாக்குதல் நடத்திய நபரை கிராம மக்கள் பிடித்து ஹசலக்க பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கத்திக்குத்துத் தாக்குதலில் படுகாயமடைந்த 11ஆம் தரத்தைச் சேர்ந்த மாணவி தற்போது மஹியங்கனை ஆரம்ப வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மாணவியின் உடலில் 3 சிறிய வெட்டுக் காயங்கள் இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

சிறுமியின் தாய் பல வருடங்களாக வெளிநாட்டில் இருப்பதால், சிறுமி தனது பாட்டியுடன் வசித்து வருகிறார்.

காயமடைந்த சிறுமியின்  தந்தை  வேலைக்காக வேறு பகுதிக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கத்திக்குத்துத் தாக்குதலை மேற்கொண்டவர் தம்புத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய திருமணமாகாதவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு உள்ளான மாணவி முகநூல் ஊடாக குறித்த நபருடன் அறிமுகமாகி சுமார் ஒரு வருட காலமாக காதல் தொடர்பில் இருந்ததாகவும், சிறுமி உறவை நிறுத்தியதால் தான் தாக்கியதாகவும் குறித்த இளைஞன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹசலக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.