புஸல்லாவை பஸ்  விபத்தில்  இருவர் பலி. : பஸ்ஸை எரித்த மக்கள்.

புஸல்லாவை, காச்சாமலை வீடன் பகுதியில் இன்றைய தினம் காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். மேலும் சிலர் காயமடைந்தனர். ஆத்திரமடைந்த மக்கள் பஸ்ஸையும் தீயிட்டு கொளுத்தி உள்ளனர்.

புஸ்ஸலாவ, பெரட்டாசி தோட்டத்திலிருந்து, புஸ்ஸலாவை நகரத்துக்கு பயணிகளை ஏற்றிவந்த பஸ் ஒன்றே, குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் ‘புட்போட்’டில் பயணித்த இருவரே, பஸ் மண்திட்டில் சாய்ந்ததால், அதில் சிக்குண்டு பலியாகியுள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் பெரட்டாசி தோட்டத்தில் வசிக்கும் சுரேன்ஜித் புஷ்பகுமார் (39 வயது) மற்றும் ஹெல்போட 7ம் கட்டை தோட்டத்தில் வசிக்கும் விஜயகுமார் கவிஷ்கர் (20 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுமார் 80 பேர் வரை பஸ்ஸில் பயணித்துள்ளனர். 

அதிகளவான பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்ததாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது, பலர் புட்போட்டிலும் தொங்கிக்கொண்டு பயணித்துள்ளனர்.

சிறு காயங்களுக்கு உள்ளானவர்கள் ஆரம்பக்கட்ட சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர். 

உயிரிழந்தவர்களின் சடலங்கள் புஸல்லாவை, வகுவப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து சம்பவத்தினால் ஆத்திரமடைந்த மக்கள், பஸ்ஸை தீயிட்டு கொளுத்தி உள்ளனர். 

பெரட்டாசி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

பஸ் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.