மல்ஷா குமாரதுங்க தொடர்பில் வெளியாகிய  போதைப்பொருள் குற்றச்சாட்டு

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினரால் தாம், கைது செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவிவரும் செய்திகளை முன்னாள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்கவின் மகள் மல்ஷா குமாரதுங்க மறுத்துள்ளார்.

அந்த செய்திகள் பொய்யானவை என்றும், தான் தனது தாயுடன் வீட்டில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பரவிய செய்திகளின்படி, நேற்று இரவு பொரலஸ்கமுவ பகுதியில் மல்ஷா காரில் பயணித்தபோது பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், பொலிஸார் 2 கிலோ போதைப்பொருளைக் கண்டுபிடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்போது, அவர் உடனடியாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுடன் தொடர்பு கொண்டதாகவும், சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு வந்த அவர் பொலிஸாரை மிரட்டியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இருப்பினும் இந்த கூற்றுக்கள் அனைத்தையும் மறுத்த மல்ஷா இது பொய்யான செய்தி என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஊடகம் ஒன்றின் தகவல்படி, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளும், மல்ஷாவின் கைது தொடர்பாக தங்களுக்குத் தெரியாது என்று கூறியுள்ளனர்.