மாணவர்களை ஏற்றாது சென்ற பேருந்துகள். ; ஆத்திரமடைந்த  பெற்றோர், ஏ-9 வீதியில் போக்குவரத்து தடை

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவின் பனிக்கன்குளம், கிழவன் குளம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாங்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்று வருகின்றனர்

இவர்களுக்கும்  பாடசாலைக்கும்  இடையில் சுமார் பத்து  கிலோமீற்றர் இடைவெளி காணப்படுகிறது.  

இவர்கள் பாடசாலைக்கு செல்ல வேண்டியுள்ள ஏ-9 வீதியூடாக பல போக்குவரத்து சேவைகள் இடம்பெறுகின்ற போதும் இந்த பாடசாலை மாணவர்களுக்கான சேவையை வழங்குவதில் பேருந்து சாரதிகள் நடத்துனர்கள் சரியாக செயல்படவில்லை என மக்கள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றனர்.

மாணவர்கள் வீதியில் நின்று பேருந்தை மறிக்கும் போதும் அவர்களை ஏற்றாது செல்கின்ற அரச மற்றும் தனியார் பேருந்துகளால் மாணவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு பாடசாலைக்கு உரிய நேரத்திற்கு செல்லவும் பாடசாலையிலிருந்து மீண்டும் உரிய நேரத்திற்கு வீடு திரும்பவும் முடியாத நிலைமையில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பலருக்கு தெரியப்படுத்தியும் ஊடகங்களில் பல்வேறு தடவைகள் இந்த விடயம் தொடர்பில் சுட்டிக் காட்டப்பட்டும் இதுவரை இந்த பிரச்சனை தீர்க்கப்படாத பிரச்சினையாகவே காணப்படுகிறது குறிப்பாக மாணவர்கள் மாத்திரமன்றி குறித்த கிராமங்களில் இருந்து மாங்குளம் நகரத்திற்கு செல்கின்ற பொதுமக்கள் வயோதிபர்கள் நோயாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் பேருந்துகள்  ஏற்றிச் செல்லாத காரணத்தினால் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

பல்வேறு இடங்களிலும் பேருந்து சேவைகள் இல்லாமையால் பயணிகள் பயணத்தை மேற்கொள்ள முடியாமல் சிரமப்படுகின்ற போதும் இந்த வீதியிலே அதிகளவான பேருந்து சேவைகள் இடம்பெறுகின்ற போதும்  இந்த பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லலாமையானது பொதுமக்கள் மத்தியில் பாரிய விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

22.08.2022 அன்று இந்த விடயம் தொடர்பில் மக்கள் ஊடகங்களில் தொடர்ச்சியாக பாடசாலைகளுக்கு மாணவர்களை ஏற்றாது பேருந்துகள் செல்வதாகவும் மாணவர்களை ஏற்றும் பேருந்தின்  நடத்துனர்கள் சாரதிகள் ஏற்றிவிட்டு அவர்களை ஏசுவதாகவும் இவ்வாறான பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து மாணவர்கள் உரிய நேரத்திற்கு பாடசாலை சென்று வீடு திரும்பி வர முடியாத நிலையில் காணப்படுவதாகவும் எனவே இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு இந்த வீதியில் இடம் பெறுகின்ற பேருந்து சேவைகள் அனைத்திலும் மாணவர்கள் இலகுவாக பாடசாலைக்கு சென்று வரக்கூடிய வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்

குறித்த  கிழமைக்குள்  சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படாத பட்சத்தில் வருகின்ற கிழமை  ஏ-9 வீதியை பனிக்கன்குளம் பகுதியிலே மறித்து  எந்த ஒரு வாகனத்தையும் செல்ல விடாது தடுத்து பாரிய ஆர்ப்பாட்டத்தை செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இருப்பினும் 22.08.2022 முதல் 26.08.2022 வரை வடமாகாண இலங்கை போக்குவரத்து சபை உத்தியோகத்தர்கள் பனிக்கன்குளம் பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைக்காக அமர்த்தப்பட்டு அந்த கிழமை அனைத்து மாணவர்களையும் பேருந்துகள் ஏற்றி சென்றன அதன் பின்னர் கடந்த வாரம் மீண்டும் மாணவர்களை பேருந்துகள் ஏற்றாமல் சென்றது இவ்வாறான நிலையில் இன்று காலை முதல் பாடசாலையில் பரீட்சையில் கலந்து கொள்ள வேண்டிய நிலையில் மாணவர்கள் 6.40 மணிமுதல் வீதியில் நின்று 8 மணியை கடந்தும் பேருந்துகள் எவையும் ஏற்றி செல்லாத காரணத்தினால் ஏ_9 வீதியை மறித்து போராட்டம் நடத்தினர்.

இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாங்குளம் பொலிசார் வீதியை திறந்து விடுமாறும் மக்களை வந்து முறைப்பாடு பதிவு செய்யுமாறும் தாங்கள் நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை எடுப்பதாகவும்  உறுதியளித்ததை தொடர்ந்து மக்கள் வீதியை திறந்து விட்டனர்

சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது இதன்பின்னர் மக்கள் மாங்குளம் பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்

தொடர்ந்தும் தீர்வில்லையேல்  முழுமையாக வீதியை மறித்து போராட்டம் செய்வோம் என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.