மிக்-21  விமானம் விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உயிரிழப்பு

ராஜஸ்தானிலுள்ள உட்லாய் விமான தளத்திலிருந்து பறந்து சென்ற பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ராஜஸ்தானிலுள்ள பார்மர் மாவட்டத்தின், படூ காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பிம்டா கிராமத்தின் புறநகரில், நேற்றிரவு (28/7/2022) 9 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. சற்றும் எதிர்பாராத விதமாக நடந்த இந்த சம்பவத்தால், மாவட்ட ஆட்சியர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் விமானப்படை அதிகாரிகள் உட்பட மாவட்ட நிர்வாகிகள் பலரும் நேற்றிரவே சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து நேற்று வெளியான அறிக்கையில், “இந்திய விமானப் படையின் இரட்டை இருக்கைகள் கொண்ட மிக்-21 என்ற பயிற்சி விமானம் இன்று மாலை ராஜஸ்தானிலுள்ள உட்லாய் விமான தளத்திலிருந்து பயிற்சிக்காகப் பறந்து சென்றது. பின்னர் திடீரென இரவு 9:10 மணியளவில், பார்மர் அருகே எதிர்பாராத விதமாக விமானம் விபத்துக்குள்ளானது. அதில் விமானிகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் உயிரிழப்புக்கு இந்திய விமானப் படை வருந்துகிறது. மேலும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உறுதுணையாக இருக்கும்” என்று இந்திய விமானப் படை கூறியிருக்கிறது.