மேலும் 8 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர்

இலங்கை யாழ் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக், ரத்தினம், கீதா குமாரி அவர்களது குழந்தைகள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் மற்றும் மன்னாரை சேர்ந்த சாகுல் ஹமீது ஒருவர் என மொத்தம் 8 பேர்   இலங்கை மன்னாரில் இருந்து படகு மூலம் புறப்பட்டு இன்று திங்கட்கிழமை (22) அதிகாலை  தனுஷ்கோடி பாலம் அருகே சென்று இறங்கினர்.

தனுஷ்கோடி வந்த இலங்கை தமிழர்கள் தாங்களாக ஆட்டோவில் ஏறி மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு சென்றனர். இதனை அடுத்த மண்டபம் மரைன் பொலிஸார் நடத்திய விசாரணையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக தற்போது அத்தியாவசிய பொருட்களான அரிசி,பருப்பு,கோதுமை, விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் வாழ வழியின்றி உயிரை காப்பாற்றி கொள்ள தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாகவும், தாங்கள் அனைவரும் 1990 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போரின் காரணமாக    தமிழகத்திற்கு அகதியாக வந்து குடியாத்தம் முகாமில்  தங்கி இருந்து மீண்டும் இலங்கைக்கு சென்றதாகவும் தெரிவித்தனர்.

மத்திய,மாநில உளவுத்துறை அதிகாரிகள் விசாரணைக்குப் பிறகு 8 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர். மேலும் தமிழகத்திற்கு இலங்கையிலிருந்து வந்த அகதிகளின் எண்ணிக்கை  149 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.