வரக்காபொலவில் மண்மேடு சரிந்ததில் தாய் மற்றும் மகனின் உடலங்கள் மீட்பு

வரக்காபொல – கும்பலியத்த பிரதேசத்தில் இரண்டு மாடிகளைக் கொண்ட வீட்டின் மீது மண்மேடு சரிந்ததில் அதில் சிக்கியிருந்த பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மண்மேடு நேற்று (14.10.2022) மாலை சரிந்து விழுந்துள்ள நிலையில், பெண்ணின் உடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினர், அப்பகுதி மக்கள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கேகாலை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை உயிரிழந்த பெண்ணின் மகன் மண் சரிவுக்கு அடியில் சிக்கி  காணாமல் போன மகனின் சடலமும் இன்று காலை பாதுகாப்பு தரப்பினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

24 அகவையுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  

அனர்த்தம் இடம்பெற்ற போது, குடும்பத் தலைவரை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, பின்னர் அவர் சிகிச்சைக்காக வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் உயிரிழந்த பெண்ணின் பத்து வயதான இளைய மகன், பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியதாகவும், அவர் தற்போது தனது நண்பரின் வீட்டில் தங்கியிருப்பதாகவும் வரக்காபொல பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.