வவுனியாவில் ரயிலில் மோதுண்டு குடும்பஸ்தர் பலி

வவுனியா மெனிக்பாம் பகுதியில் உள்ள புகையிரத கடவையினை கடக்க முயன்ற குடும்பஸ்தர் புகையிரதத்தில் மோதுண்டு இன்றைய தினம் மரணமடைந்துள்ளார்.

இன்று (4) காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

செட்டிகுளம் பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து விவசாய காணியினை பார்வையிடுவதற்காக மெனிக்பாம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த போது குறித்த பகுதியில் அமைந்துள்ள புகையிரத கடவையை கடக்க முற்பட்ட நிலையில் மன்னாரிலிருந்து மதவாச்சி நோக்கி பயணித்து கொண்டிருந்த புகையிரதத்துடன் மோதுண்டு படுகாயமடைந்திருந்தார்.  

காயங்களுக்கு உள்ளான குறித்த நபர் உடனடியாக அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

எனினும் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

செட்டிக்குளம் துடரிக்குளம் பகுதியை சேர்ந்த  55 வயதுடையகந்தையா மோகனதாஸ் என்ற குடும்பஸ்தரே விபத்தில் பலியாகியுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக பறையனாலங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.