விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் மீது தாக்குதல்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு விசுவமடு விவசாயிகள் பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பாவனையாளர்கள் கும்பல் ஒன்று எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.

விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த காலங்களில் ஒரு கும்பல் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறே நேற்றும் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

பெற்றோலினை பெற்றுக்கொள்ள சென்றவர்கள் QR கோட்டினை காட்டியுள்ளார்கள்.

 அந்த  QR   கோட்டிற்கு ஏற்கனவே பெற்றோல் அடிக்கப்பட்டு விட்டதாக காட்டியுள்ளது.

இதனை ஊழியர்கள் பாவனையாளர்களிடம் தெரிவித்த போது இல்லை பெற்றோல் அடிக்க வேண்டும் என அடம் பிடித்த பாவனையாளர்கள் குழு முகாமையாளர் கதைத்து பேசிக்கொண்டு இருக்கும் போது திடீரென முகாமையாளர் மீதும், ஊழியர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

காயங்களுக்கு இலக்கான முகாமையாளர் மற்றும் ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையினை புதுக்குடியிருப்பு பொலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரண்டு பொலீசார் கடமையில் நிக்கும் போதே இவ்வாறான சம்பவம் பதிவாகியுள்ளதுடன் எரிபொருள் நிரப்பு நிலைய சொத்திற்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் கருத்து தெரிவிக்கையில்,

ஒரு கும்பல் தவறான  QR கோட்டினை கொண்டுவந்து பெற்றோல் அடிக்க சொல்லி ஊழியரிடம் அடம் பிடித்துள்ளார்கள்.

 இதன் போது ஏற்பட்ட முரண்பாட்டில் ஊழியர்கள் இருவர் மற்றும் கொள்வனவு முகாமையாளர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

தொடர்ந்து பொலீஸ் பாதுகாப்பு போதியளவு இல்லாத நிலையில் எரிபொருள் விநியோகம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உரிய பாதுகாப்பும் பணியாளர்களுக்கான பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் இடத்தில்தான் நாங்கள் பணி செய்யலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.