வெடுக்குநாறிமலைக்கு கருணாம்மான் விஜயம் 

வெடுக்குநாறிமலைக்கு நேரடி கள விஜயம் மேற்கொண்டு அங்குள்ள களநிலவரங்களை கருணாம்மான் ஆராயவுள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவரும், அம்மான் படையணியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான ஜெயா சரவணா தெரிவித்தார்.

பிரத்தியேகமாக வழங்கப்பட்ட செவ்வி ஒன்றின் போது தற்போது நடைபெறும் தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராக நீங்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை? என  வினவிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

எங்களுடைய கலாச்சார விடயங்கள் பூமியில் சீரழிக்கப்படும் போது எமது பங்கு அதிகம் இருக்கின்றது. கடந்த வாரமும் வெடுக்குநாறிமலை தொடர்பாக கண்டன அறிக்கையினை நாம் வெளியிட்டிருந்தோம்.

அத்துடன் எதிர்வரும் வாரத்தில் எங்களுடைய தலைவர் கருணாம்மான் நேரடி களவிஜயம் மேற்கொள்ளவுள்ளார். நீதிமன்றத்திலே இவ்விடயம் நடந்து கொண்டிருக்கின்றது. இதனை அரசியலாக்க வேண்டும் என்ற காரணத்தினால் மக்களை ஒரு பொது நிலையில் வைத்திருக்க சில அரசியல் கட்சிகள் செயற்படுகின்றன.

இந்துக்களின் கலாச்சாரத்தை சீரழிக்க கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்கின்றோம். ஆனால் அரசியலாக்கும் முனைவு மேற்கொள்ளப்படுகின்றது. ஏனைய கட்சிகளது பிரசன்னம் கூட மழுங்கடிக்கப்பட்டு ஒரு சில கட்சிதான் செய்வது போல் வெளியே ஒரு விம்பத்தை கட்டமைத்து கொண்டிருக்கின்றார்கள்.

குறித்த விடயம் நீதிமன்றங்களூடாக தீர்க்கப்பட வேண்டிய விடயம் மிக விரைவில் அது நிறைவேறும் என நினைக்கிறேன். அத்தோடு எங்களுடைய தலைமையும் ஜனாதிபதியுடன் கதைத்து இதற்கான தீர்வினை பெற்றுத்தருவார் என மேலும் தெரிவித்தார்.