ஆணின் சடலம் மீட்பு – கொலையா ? விபத்தா ? 

அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை மேபீல்ட் சந்தியில் வீதி ஓரத்தில் அடையாளம் காணப்படாத நிலையில் இன்று காலை ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீதியின் ஓரத்தில் சடலம் ஒன்று இருப்பதாக பொலிஸாருக்கு பொதுமக்கள் தகவல் வழங்கியதையடுத்து இன்று காலை திம்புள்ள பத்தனை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டு தடயவியல் பிரிவு பொலிஸாரை அழைத்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை பெற்று மரண விசாரணை அதிகாரி முன்னிலையில் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்படும் என தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் காயங்களுடன் காணப்படுவதாகவும், இவர் கொலை செய்யப்பட்டுள்ளாரா? அல்லது வீதி விபத்தில் உயிரிழந்தாரா? என பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்படவில்லை எனவும் இவர் தொடர்பான அடையாளம் தெரிந்தவர்கள் உடன் பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.