இங்கிலாந்திடம் இந்தியா படுதோல்வி.

T-20 உலகக்கிண்ணத் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில், இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்குள் அயெடுத்து வைத்த இங்கிலாந்து அணி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இன்று (வியாழக்கிழமை) அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் இந்திய கிரிக்கெட் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஹர்திக் பாண்ட்யா 63 ஓட்டங்களையும் விராட் கோஹ்லி 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், கிறிஸ் ஜோர்தான் 3 விக்கெட்டுகளையும் கிறிஸ் வோக்ஸ் மற்றும் அடில் ராஷித் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 169 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து அணி, 16 ஓவர்கள் நிறைவில் எவ்வித விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை கடந்தது. இதனால், இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இதன்போது அலெக்ஸ் ஹேல்ஸ் ஆட்டமிழக்காது 86 ஓட்டங்களையும் ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்காது 80 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 47 பந்துகளில் 7 சிக்ஸர்கள் 4 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 86 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட அலெக்ஸ் ஹேல்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.