இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட 14 பேர் பலி.

மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள கேமரூனில் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட 14 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள கேமரூன் நாட்டின் தலைநகர் யவுண்டேவில், இந்த ஆண்டு கனமழை காரணமாக பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

வெள்ளத்தால் அந்நகரின் உள்கட்டமைப்பு சிதைந்ததுடன், ஆயிரக்கணக்கானோர் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில் அங்குள்ள 20 மீட்டர் உயரமுள்ள அணைகட்டுப் பகுதியின் அடிவாரத்தில் உள்ள மைதானத்தில் இறுதிச் சடங்கு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இறுதிச்சடங்கில் அப்பகுதி மக்கள் அதில் கலந்து கொண்டிருந்தனர்.

அப்போது நிலச்சரிவு ஏற்பட்டு மண்சுவர் அவர்கள் மேல் இடிந்து விழுந்ததில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் மீட்பு படையினரின் உதவியுடன் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.