இலங்கையர் ஒருவர் அமெரிக்க காவல்துறையினர் சுட்டுக்கொலை.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வசித்துவந்த, இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் கடந்த நவம்பர் 15 ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ராஜன் முணசிங்க என்ற 33 வயதுடைய ஒருவரே உயிரிழந்தவராவார்.

ராஜன் சில நாட்கள் தமது வீட்டில் இருக்கவில்லை என்றும் அவர் மீண்டும் வீட்டுக்கு திரும்பிய போது, தமது வீட்டுக்குள் திருடர்கள் நுழைந்திருப்பதாக அனுமானித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் தமது நண்பர் ஒருவருக்கு கைபேசி ஊடாக அறிவித்துள்ளார்.

அதன்போது, தமது வீட்டு கதவுக்கு அருகில் இருந்த தமது துப்பாக்கியை தற்பாதுகாப்புக்காக கையில் எடுத்துள்ளார்.

இதன்போது, தமது வீட்டு முற்றத்தில் துப்பாக்கியுடன் நின்றிருந்த ராஜனை ஒஸ்டின் காவல்துறையினர் சுட்டுக்கொலை செய்ததாக அவரது உறவினர்கள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அவர் தமது கையில் வைத்திருந்த துப்பாக்கியை கீழே வைப்பதற்கு போதிய நேரத்தைக்கூட காவல்துறையினர் வழங்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் கடந்த நவம்பர் 15 ஆம் திகதி நள்ளிரவு 12.30க்கும் இடம்பெற்றுள்ள நிலையில், அவசர இலக்கத்துக்கு கிடைத்த அழைப்புக்கமைய, தாம் அவ்விடத்துக்கு சென்றதாக ஒஸ்டின் காவல்துறையினர் மன்றில் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிதாரி தமது வீடு மற்றும் வீதியை நோக்கி துப்பாக்கியில் குறிவைத்த படி இருப்பதாகவும், குறித்த நபர் தமது வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் அழைப்பை மேற்கொண்டவர் தெரிவித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ராஜன் முணசிங்க மீது டேனியல் சென்செஸ் என்ற காவல்துறை அதிகாரி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் அவர் தற்போது கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஒஸ்டின் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.