காலியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி.

காலி, பிடிகல – தல்கஸ்வல பிரதேசத்தில் நேற்று (3) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பிடிகல மியாகம பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நபர் நேற்று நகருக்குச் சென்று உந்துருளியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, வீட்டின் அருகே அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பதுங்கியிருந்த நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த நபர் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

மேலும் விசாரணையில் உயிரிழந்தவர் கடன் கொடுத்தவர் என்பது தெரியவந்துள்ளது.

பணத் தகராறு காரணமாக இந்நபர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் இதுவரை அடையாளம் காணப்படாத அதேவேளை, விசாரணைகளுக்காக விசேட காவல்துறை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.