கைவிடப்பட்ட நிலையில் சிசு மீட்பு

தலவாக்கலை இந்து கோவிலுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் இருந்து கைவிடப்பட்ட நிலையில் பெண் சிசு ஒன்று உயிருடன் மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சமந்த பெரேரா தெரிவித்தார்.

தலவாக்கலை லிந்துலை நகரசபை ஊழியர்கள் இப்பகுதியை சுத்தம் செய்ய வந்தபோது முச்சக்கர வண்டிக்குள் சிசு அழும் சத்தம் கேட்க, குறித்த ஊழியர்கள் முச்சக்கரவண்டியை பார்த்த பொழுது, வண்டியின் பின் இருக்கையில் சிசு ஒன்று இருந்துள்ளது.

பிறந்து 12-14 நாட்களே ஆன பெண் சிசு எனவும், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் உள்ள பெண் பொலிஸ் அதிகாரியினால் தாய்ப்பாலை வழங்கியதையடுத்து, குழந்தை லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

அத்தோடு, சி.சி.டி.வி கமெராவின் காட்சிகளை அடிப்படையாக கொண்டு, சிசுவை கைவிட்டு சென்ற நபர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.