கொழும்பை உலுக்கிய மாணவன், மாணவியின் மரணம்

கொழும்பு, கொம்பனிவீதி அல்டைர் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 67வது மாடியில் இருந்து பாடசாலை மாணவனுடன் குதித்து உயிரை மாய்த்ததாக சந்தேகிக்கப்படும் 15 வயதுடைய மாணவி இதற்கு முன்னரும் உயிரை மாய்க்க முயற்சித்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கொழும்பு குருந்துவத்தையில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயின்ற மாணவியும் மாணவனும் உயிரை மாய்த்துக் கொண்டமைக்கான காரணம் என்னவென்பது இதுவரையில் வெளியாகவில்லை.

எனினும் சம்பவத்தன்று உயிரிழந்த மாணவி படித்த பாடசாலையில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதுவரை பொலிஸார் நடத்திய விசாரணையில் இந்த மாணவிக்கும் மாணவனுக்கும் இடையே காதல் தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.

இருவரும் போதைப்பொருள் உட்கொண்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் 67வது மாடியில் இருந்து ஒரு ஜோடி காலணிகள், பணப்பைகள், கையடக்க தொலைபேசிகள் மற்றும் சிகரெட் பக்கட்டுகளை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

உயிரை மாய்த்ததாக சந்தேகிக்கப்படும் மாணவ, மாணவிகள் வெள்ளவத்தை மற்றும் களனி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் குருந்துவத்தையில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்துள்ளனர்.  இலங்கை – பாகிஸ்தான் நாடுகளை பின்புலமாக கொண்ட குடும்பத்தை சேர்ந்த மாணவன், இந்த மாணவியுடன் ஒரே வகுப்பில் கற்றுள்ளனர்.

இவர்கள் இருவருமே உயிரிழந்தவர்கள் ஆவார். கொம்பனிவீதி அல்டைர் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் உயிரிழந்த மாணவனின் தந்தைக்கு சொந்தமான ஒரு குடியிருப்பு இருந்துள்ளது.

குறித்த மாணவனின் நட்பால் மாணவியும் சில நண்பர்களும் அடிக்கடி இந்த சொகுசு குடியிருப்பிற்கு சென்று வந்துள்ளனர். குடியிருப்பின் பாதுகாப்பு அதிகாரிகளிடம் தனது மகன், நண்பர்களுடன் வந்தால் நுழைய அனுமதிக்குமாறு ஏற்கனவே தந்தை கூறியுள்ளார்.

அதற்கமைய நேற்று முன்தினம் மாலை பாடசாலை முடிந்து இந்த மாணவியும் மாணவனும் முச்சக்கர வண்டியில் அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்தனர்.

அடுக்குமாடி கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் உள்ள உடற்பயிற்சி மையத்தின் தங்கும் விடுதிக்கு சென்று பாடசாலை சீருடைகளை மற்ற உடைகளை அணிந்து கொண்டு 67வது மாடிக்கு சென்றுள்ளனர்.

இமாமின் குடியிருப்பு 65வது மாடியில் உள்ளது. அவர்கள் அனைத்து பொருட்களையும் பெல்கனியில் வைத்துவிட்டு 67வது மாடியில் இருந்து குதித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இவர்களது சடலங்கள் அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.