கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சி, முட்டைக்கு தட்டுப்பாடு.

சந்தையில் கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சியும், முட்டைக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழிப் பண்ணையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் ஆர்.எம்.ரத்நாயக்க கூறுகையில், முட்டைக் கட்டுப்பாட்டு விலையில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக முட்டை உற்பத்தி செய்யும் விவசாயிகள் கோழிகளை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக சந்தையில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 700 ரூபா வரை குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

சந்தையில் முட்டையின் பல்வேறு விலைகள் காரணமாக, முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்து அரசாங்கம் அண்மையில் வர்த்தமானியை வெளியிட்டது.

இதற்கு முட்டை உற்பத்தியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

சில உடன்பாடுகள் ஏற்பட்டாலும், அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலைக்கு சந்தையில் முட்டை விற்பனை செய்யப்படுவதில்லை என நுகர்வோர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதேவேளை, எரிபொருள் நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக மீன்களின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.