சமந்தா விவாகரத்துக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை!

சமந்தா விவாகரத்திற்கு தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகன் கே.டி.ராமாராவ் காரணம் என்று தெலுங்கானா அமைச்சர் சுரேகா குற்றம் சாட்டி இருந்தார். இந்த குற்றச்சாட்டை மறுத்து நடிகர் நாகார்ஜுனா ஏற்கனவே விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை சமந்தா தனது வலைதளத்தில் இந்த விவகாரம்      குறித்து வெளியிட்டுள்ள பதிவில், “நாக சைதன்யாவுடனான எனது விவாகரத்துக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை” என்று விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் அந்த பதிவில், “எங்களுக்குப் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து நடந்தது. இதில் எந்த அரசியல் சதியும் இல்லை. தயவு செய்து அரசியல் சண்டைகளில் எனது பெயரை இழுக்காதீர்கள்” என்றும் சமந்தா கேட்டுக்கொண்டுள்ளார்.

“நான் எப்போதும் அரசியலுக்கு அப்பாற்பட்டவள். அதைத் தொடர்ந்து செய்ய விரும்புகிறேன்” என்றும் சமந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அதேநேரம், “எனது விவாகரத்து ஒரு தனிப்பட்ட விஷயம். அதைப் பற்றி ஊகங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றும் சமந்தா கூறியுள்ளார்.

மேலும், அந்தப் பதிவில், “ஒரு பெண்ணாக இருக்கவும், ஒரு பெண்ணாக வெளியில் வந்து வேலை செய்யவும், காதல் செய்வதற்கும், காதல் இருந்து விலகுவதற்கும், போராடுவதற்கும் நிறைய தைரியமும் வலிமையும் தேவை” என்றும் சமந்தா உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் , சமந்தாவிற்கு ஆதரவாக நடிகர் நாகார்ஜுனா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில், “அமைச்சர் சுரேகாவின் கருத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் சினிமா நட்சத்திரங்களை, வாழ்க்கையின் எதிரிகளை விமர்சனம் செய்ய பயன்படுத்த வேண்டாம்.

தயவு செய்து மற்றவர்கள் தனிப்பட்ட உரிமையை மதித்து செயல்படுங்கள். பொறுப்பான பதவியில் இருக்கும் நீங்கள், ஒரு பெண்ணாக இருந்து கொண்டு எங்கள் குடும்பத்தின் பெண்ணுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதும், குற்றச்சாட்டுகள் வைப்பதும் பொருத்தமற்றதாக உள்ளது.

மேலும், உங்கள் கருத்தை உடனே திரும்ப பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனப் பதிவு செய்துள்ளார். நாகார்ஜுனாவின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அத்தோடு, எப்பேற்பட்ட முட்டாள் தனத்தையும் பேசி தப்பித்து விடலாம் என்று நினைக்கும் அரசியல்வாதிகளைப் பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது. இவ்வளவு மரியாதைக்குரிய பதவியில் இருப்பவர் ஊடகங்களுக்கு முன்னால் இப்படி அடிப்படை ஆதாரமற்ற குப்பைகளைப் பேசுவது சரியல்ல.

நமது சமூகத்தை மோசமாகப் பிரதிபலிக்கும் இச்செயலை அனைவரும் கண்டிக்க வேண்டும் என நடிகர் நானி தெரிவித்துள்ளார். மேலும், நடிகை அமலா , பிரகாஷ் ராஜ் , ஜீனியர் என்.டி.ஆர், நடிகை ரோஜா ஆகியோரும் கண்டனம் வெளியிட்டள்ளனர்.

இந்த விடயம் பெரும் பேசு பொருளாகியுள்ள நிலையில், மந்திரி சுரேகா தெரிவித்த கருத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும். பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி சந்திரசேகர ராவின் மகன் கே.டி.ராமராவ் அழைப்பாணை அனுப்பியிருந்தார்.

24 மணி நேரத்திற்குள் பெண் மந்திரி மன்னிப்பு கேட்க தவறினால் அவதூறு வழக்கு மற்றும் தொடர்புடைய கிரிமினல் வழக்குகள் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை தொடங்குவேன் என்று அவர் கடுமையாக எச்சரித்தார்.

இந்த நிலையில் சமந்தா குறித்து கூறிய கருத்துக்கு பகிரங்க மன்னிப்பு கேட்டு பெண் மந்திரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கே.டி.ராமராவ் பெண்களை இழிவுபடுத்தும் மனப்பான்மையை கொண்டவர் என்பதே தனது கருத்துக்களின் நோக்கம். சமந்தாவின் உணர்வுகளை புண்படுத்துவது நோக்கம் அல்ல.

சமந்தா தன்னம்பிக்கையுடன் வளர்ந்த விதம், அவரது அபிமானம் மட்டுமல்ல அவர் பெண்களுக்கு முன்மாதிரியும் கூட.

சமந்தா அல்லது அவரது ரசிகர்களும் என்னுடைய கருத்துக்களால் புண்பட்டிருந்தால் அந்த கருத்துக்களை திரும்ப பெறுகிறேன். வேறு விதமாக எனது கருத்தை நினைக்க வேண்டாம். என்னுடைய கருத்தை நிபந்தனை இன்றி வாபஸ் பெறுகிறேன் என தெரிவித்துள்ளார்.