சிறுமியை சீரழித்து கொன்றவரை கைது செய்ய பொதுமக்களின் உதவி தேவை!

சிறைச்சாலை உத்தியோகத்தர்களிடம் இருந்து தப்பிச் சென்ற சந்தேகநபர் ஒருவரைப் பிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

தலைமன்னார் பிரதேசத்தில் 9 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

சிறைச்சாலையில் இருந்தபோது சுகயீனமடைந்து சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அப்துல் ரஹ்மான் எனப்படும் கந்தையா விஜயன் திருகோணமலை, குச்சவெளியை வசிப்பிடமாகக் கொண்டவராவார்.

55 வயதுடைய சந்தேக நபருக்கு வலது கையின் கீழ் பகுதியில் காயத்தின் தழும்பும், மார்பின் மேல் இடது பக்கத்தில் கரும்புள்ளியும், மார்பின் நடுப்பகுதியில் குணமடைந்த காயமும் உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் 071 8591364 அல்லது 071 8591370 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.