தனுஷ்க குணதிலக்கவுக்கு பிணை.

பாலியல் குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவை பிணையில் செல்ல சிட்னி நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

1 இலட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டொலர் பிணையில் செல்ல இன்றைய தினம்(17) சிட்னி நீதிமன்றம் உத்தரவிட்டது.

29 வயதுடைய யுவதி ஒருவர் வழங்கிய பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கு அமைய, தனுஷ்க குணதிலக்க கடந்த 6ஆம் திகதி அவுஸ்திரேலிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதையடுத்து, தனுஷ்க குணதிலக்கவிற்கான முதலாவது பிணை மனு கடந்த 7ஆம் திகதி நிராகரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இரண்டாவது பிணை விண்ணப்பம் கடந்த 14ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

இரண்டாவது பிணை கோரிக்கை மனுவினை எதிர்வரும் 08ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளதாக நீதிமன்றம் முன்னதாக அறிவித்திருந்தது.

எனினும், தனுஷ்க குணதிலக்கவின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

இதன்போதே, தனுஷ்க குணதிலக்கவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.