துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 4 வயது சிறுவன் பலி.

யக்கலமுல்ல – குருந்துவாடி, களுவாகலை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நான்கு வயது சிறுவன் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யக்கலமுல்ல, மகேதர பிரதேசத்தைச் சேர்ந்த 4 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 19ஆம் திகதி யக்கலமுல்ல குருந்துவாடி, களுவாகலை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், நான்கு வயது குழந்தையும் மற்றுமொருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது துப்பாக்கிச் சூட்டில் நான்கு வயது சிறுவனுக்கு அடிவயிற்றில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிறுவனுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் T  56 ரக துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதுடன் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய யக்கலமுல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.