நடிகர் பிரதீப் கே. விஜயன்  மர்ம மரணம்!

‘தெகிடி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள, நடிகர் பிரதீப் கே விஜயன் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம், கோலிவுட் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2013 -ம் ஆண்டு, நடிகர் மிர்ச்சி சிவா – வசுந்தரா காஷியாப் நடிப்பில், கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கத்தில் வெளியான ‘சொன்னா புரியாது’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் பிரதீப் கே விஜயன்.

‘தெகிடி’, ‘வட்டம்’, ‘டெடி’, ‘லிப்ட்’ உள்ளிட்டப் படங்களில் நடித்தவர் நடிகர் பிரதீப் கே விஜயன். வில்லன், நகைச்சுவை நடிகர் என தனது நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 

இந்நிலையில், அவரது திடீர் மரணம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் வசித்து வந்த நடிகர் பிரதீப் கே விஜயன், கடந்த இரண்டு நாட்களாக வெளியே வரவில்லை என்றும் நண்பர்கள் அவரை தொடர்பு கொள்ள முயன்ற போதும் அது தோல்வியிலேயே முடிந்திருக்கிறது.

இதனால், காவல்துறை உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அவர் உயிர் பிரிந்த விஷயம் தெரிய வந்திருக்கிறது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

ஆனால் மரணத்திற்கான காரணம் குறித்து இன்னும் உறுதிப்படுத்தவில்லை. போலீஸார் இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

குளியலறையில் தலையில் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.