நண்பியுடன் தம்பதி தற்கொலை – விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

ஆசிரியை தோழி ஒருவருடன் சேர்ந்து மருத்துவ தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மந்திர சக்தியை பெறுவதற்காக ஆசிரியை தோழி ஒருவருடன் சேர்ந்து மருத்துவ தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

கேரளாவில் ஆயுர்வேத மருத்துவர்களாக கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த நவீன் தாமசும், அவரது மனைவி தேவியும் இருந்து வந்துள்ளனர்.

இருவரும் தங்களது தோழி ஆர்யா நாயர் என்பவருடன் சேர்ந்து அருணாசல பிரதேசத்திற்கு சென்றுள்ளனர். மூவரும் சுற்றுலா சென்றிருப்பதாக அவர்களது உறவினர்களும் நண்பர்களும் நினைத்திருந்த நிலையில், அவர்களது நோக்கம் வேறு மாதிரியாக இருந்துள்ளது.

கடந்த மாதம் 28 ஆம் திகதி அருணாசல பிரதேசத்தின் ஜிரோ என்ற பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் மூவரும் அறை எடுத்துள்ளனர். அதன்பின்னர் யாரும் அந்த அறையை விட்டு வெளியே வரவில்லை. முதலில் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாத ஓட்டல் பணியாளர்கள், 2, 3 நாட்கள் கடந்த பின்னர் சந்தேகம் அடைந்தனர்.

பின்னர் பொலிஸாரின் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மூவரும் ரத்தக் கறையுடன் உயிரிழந்து கிடந்துள்ளனர்.

அந்த அறையில் இருந்து தற்கொலைக்கு முன்னதாக அவர்கள் எழுதி கையெழுத்திட்ட கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிஸார் நடத்திய விசாரணையில் மூவரும் மந்திர சக்தியில் நம்பிக்கை கொண்டிருப்பதும், அதனை பெறுவதற்காக தங்களது உயிரை மாய்த்துக் கொண்டதும் தெரியவந்தது.

மேலும் மூவரும் தங்களது மணிக்கட்டு பகுதியில் கத்தியால் துண்டித்துள்ளனர். இதற்கிடையே ஆசிரியை ஆர்யா நாயர் காணாமல்போனதாக அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் திருவனந்தபுரம் பொலிஸாரும் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்த மூவரில் ஆசிரியை ஆர்யாவுக்கு அதிக காயங்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எந்த பின்னணியில் மூவரும் தூண்டப்பட்டு தற்கொலை செய்து கொண்டனர் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலைக்கு முன்பாக மூவரும் எழுதியிருந்த கடிதத்தில் ‘எங்களுக்கு கடன் இல்லை. எங்களுக்கு எந்த பிரச்னையும் கிடையாது.

நாங்கள் எந்த இடத்திற்கு செல்ல விரும்புகிறோமோ அங்கு செல்கிறோம்’ என்று எழுதப்பட்டு மூவரின் கையெழுத்தும் போடப்பட்டிருந்தது.