நினைவேந்தல் இரு பிரிவாக அனுஷ்டிப்பு. ; கூட்டமைப்பு பிளவின் வெளிப்பாடா?

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 49 வது நினைவேந்தல் இன்று இடம்பெற்றது.

 யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை நினைவாலயத்தில் இரு பிரிவுகளாக இரண்டு தடவைகள் இவ் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த நினைவேந்தலில், பொது மக்களும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் எவ்விதபேதமுமின்றி கலந்துகொண்டு அஞ்சலியை செலுத்த வேண்டுமென நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அழைப்பு விடுத்திருந்த நிலையிலும் இரு பிரிவுகளாக நினைவேந்தல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

அதாவது இன்று காலை பத்து மணிக்கு இவ் நினைவேந்தல் நடைபெறுமென சிவாஜிலிங்கம் அறிவித்திருந்த நிலையில் காலை 9.30 மணியளவில் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நடாத்தப்பட்டு இருந்தது.

இதில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், தமிழரசு மூத்த துணைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் உள்ளிட்ட தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் உறுப்பினர்களும் கட்சியின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

ஆனாலும் ஏனைய கட்சிகளின் ஒரு சில உறுப்பினர்களும் அதே நேரத்தில் மறவன்புலவு சச்சிதானந்தமும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஜிலிங்கம் ஏற்பாட்டில் ஏற்பாட்டில் காலை பத்து மணி அளவில் மற்றுமொரு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

இதில் கூட்டமைப்பின் பங்காளிகள் கட்சிகளின் உறுப்பினர்கள் குறிப்பாக ரெலோ மற்றும் புளொட் அமைப்பின் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் உறுப்பினர்களும் தமிழ்த் தேசியக் கட்சியின் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதில் ரெலோ அமைப்பை சேர்ந்த கோப்பாய் தவிசாளர் நிரோஷ் மற்றும் புளொட் அமைப்பை சேர்ந்த சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் கிசோர், ரெலோவின் பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் சதீஸ் உள்ளிட்டவர்களுடன் சிவாஜிலிங்கம், தமிழ்த் தேசியக் கட்சியின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.