பத்தாம் வகுப்பு மாணவியை கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்ததாக சக மாணவர்கள் கைது

கடலூர் மாவட்டம் ஆவினங்குடி அருகே அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த சிறுமி ஒருவர் சக மாணவனின் பிறந்தநாள் விழாவிற்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்பொழுது மாணவனும் மாணவியும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவோம் என மிரட்டிய சக மாணவர்கள் மூன்று பேர் அவரை தனியாக அழைத்துவந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர்.

கடந்த மே மாதம் மாணவி படிக்கும் அதே பள்ளியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவருக்கு பிறந்தநாள் விழா பள்ளி வளாகத்திற்குள் கொண்டாடப்பட்டது. அந்த 12ஆம் வகுப்பு மாணவர் மாணவியின் காதலர் என்று கூறப்படுகிறது. அவரின் பிறந்தநாள் விழாவில் பங்கு பெற்ற மாணவி, 12ஆம் வகுப்பு மாணவருடன் பேசுவதை மாணவியுடன் பயிலும் சக மாணவர்கள் மொபைலில் புகைப்படம் பிடித்துள்ளனர். அன்றைய தினம் பிறந்தநாள் நிறைவடைந்த பின்னர் மாணவி தனது வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில், மாணவியின் காதலர் என்று கூறப்படும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் தனது மேல்நிலை வகுப்பை முடித்துவிட்டதாக திட்டக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஆரோக்கியராஜ் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மாணவி கடந்த மே மாதம் 22ஆம் தேதி அவரது காதலர் என்று கூறப்படும் மாணவருடன் பேசிக்கொண்டிக்கும் போது எடுத்த புகைப்படத்தை ஜூலை 1ஆம் தேதி மாணவியிடம் காட்டி அவருடன் படிக்கும் மாணவர்கள் மிரட்டியதாக காவல் துறையினர் கூறுகின்றனர்.

“அதாவது, கடந்த ஜூலை 1ஆம்‌ தேதி அன்று மாணவியுடன் படிக்கும் சக மாணவர்கள் மூன்று பேரும் தாங்கள் எடுத்த புகைப்படத்தைக் காட்டி நீங்கள் காதலிக்கிறீர்களா என்று கேட்டு, இதை உங்கள் வீட்டில் காட்டுகிறோம் என்று கூறி மிரட்டியுள்ளனர். இதனால் பயந்த மாணவி அவ்வாறு செய்யவேண்டாம் என்றும், அந்த படத்தை மொபைலில் இருந்து நீக்கும்படி சக மாணவர்களிடம் வலியுறுத்தியுள்ளார். அப்போது ‘மொபைலை வீட்டில் வைத்துள்ளேன், நீ வந்தால் உன் கண் முன்பே அதை நீக்குகிறேன்’ என்று கூறி மாணவியை சக மாணவர்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். வீட்டுக்குச் சென்றதும் மாணவியை மிரட்டி வலுக்கட்டாயமாக சக வகுப்பு மாணவர்கள் மூன்று பேரும் பாலியல் வல்லுறவு செய்துள்ளனர்,” என்று காவல் துறையினர்  தெரிவித்துள்ளனர்.

மாணவியை இந்த மூன்று மாணவர்களும் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்ததாகவும், அதை தங்களது மொபைலில் வீடியோவாக பதிவு செய்ததாகவும் இந்த சம்பவம் குறித்து வெளியே கூறினால் இந்த வீடியோவை வெளியிட்டு விடுவோம் என்று அந்த மாணவியை மிரட்டியுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. மேலும், அந்த வீடியோவை மாணவியின் காதலர் என்று கூறப்படும் அதே பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்த மாணவருக்கு அனுப்பியுள்ளனர். மேலும், இந்த வீடியோவை வேண்டுமென்று வெளியே கசிய வைத்துள்ளனர்.

இந்த விவரம் வெளியே தெரிய வரவும் கடந்த நான்கு நாட்களாக மாணவி பள்ளிக்குச் செல்லவில்லை. அவர் மிகவும் பயந்து பள்ளிக்குச் செல்லாமல் தனது வீட்டில் வேறு பள்ளியில் சேர்க்கும்படி கூறியுள்ளார். அதையடுத்து காரணத்தை விசாரித்த பெற்றோர் மாணவியைப் பள்ளிக்கு அழைத்துச்சென்று ஆசிரியர்களிடம் கேட்டுள்ளனர். அப்போது பள்ளியில் ஆசிரியர்கள் விசாரிக்கும்போது நடந்த சம்பவம் வெளியே தெரியவந்துள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட மாணவர்களை அழைத்து விசாரணை செய்தபோது மாணவியின் புகைப்படம், வீடியோ அனைத்தும் மொபைலில் இருப்பதை கண்டறிந்தனர். பின்னர், இந்த விவகாரம் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு புகார் அளித்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து  கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்துள்ளதாக தெரிவித்தார்.

மாணவியை மிரட்டி வலுக்கட்டாயமாக பாலியல் வல்லுறவு செய்த மூன்று 10ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த பள்ளியில் 12ம் வகுப்பு படித்து முடித்த மாணவரின் காதலர் என்று கூறப்படும் மாணவர் உட்பட நான்கு பேரிடமும் விசாரணை செய்து காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது மாணவியைப் பலவந்தமாக பாலியல் வல்லுறவு செய்தது, கொலைமிரட்டல் விடுத்தது, இதற்கு உடந்தையாக இருந்தது என 4 போக்சோ வழக்கும், இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளின் கீழும் மொத்தம் 7 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தற்போது மாணவிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. தற்சமயம் மாணவி மருத்துவர் கண்காணிப்பில் பாதுகாப்பாக இருக்கிறார் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.