பிரித்தானிய ஊடகவியலாளர் இலங்கை செல்ல இந்தியா தடை

பிரித்தானிய கார்டியன் ஊடகவியலாளர் ஆகாஷ் ஹசன் இலங்கை செல்ல இந்தியா தடை விதித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL 196 இல் பயணிக்க ஆகாஷ் ஹசனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  

இது தொடர்பில் ஆகாஷ் ஹசன் டுவிட்டர் பதிவொன்றையும் பதிவிட்டுள்ளார்.

சுமார் ஐந்து மணி நேரம் ஒரு துளி தண்ணீர் கூட அருந்தாமல், எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் தான் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டதாகவும், தனது போர்டிங் பாஸை மறுத்ததன் பின்னர் கடவுச்சீட்டை வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் தான் இலங்கை செல்வதனை தடை செய்தமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் ஒரு போதும் தன்னிடம் கூறவில்லை என குற்றம் சுமத்தியவர், தனது விஜயத்தின் பின்னணி மற்றும் நோக்கம் குறித்து இரண்டு அதிகாரிகள் தன்னிடம் கேள்வி எழுப்பியதாக அவர் கூறியுள்ளார்.

எனினும் இலங்கையின் தற்போதைய நிலைமையை தெரிவிப்பதே கார்டியன் ஊடகவியலாளர் ஹசனின் இந்த விஜயத்தின் நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகிறது.