பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரான ஈழத்தமிழ் பெண்

பிரித்தானியாவில் தொழிற்கட்சி அமோக வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் நிலையில் பிரித்தானியாவில் வாழும் ஈழத்தமிழர்களும் புலம்பெயர் தமிழ் சமூகமும் மகிழ்வடையும் வகையில் தொழிற்கட்சியின் சார்பில் போட்டியிட்ட உமா குமரன்(Uma Kumaran) ஸ்ராட்போட் அன்ட் பௌவ் தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.

உமா குமரன் தன்னுடன் போட்டியிட்ட வேட்பாளர்களை விட பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அவருக்கு 19,145 வாக்குகள் கிட்டியுள்ளன. இது அந்த தொகுதியில் கிட்டிய வாக்குகளில் 44.1 வீதமாகும்.  

இதன் மூலம் ஈழத்தமிழ் பூர்வீகத்தையும் தமிழ் உணர்வையும் கொண்ட புதிய நாடாளுமன்ற உறுப்பினராக, கனடாவுக்கு அடுத்தபடியாக, பிரித்தானியாவிலும் ஈழத்தமிழ் பூர்வீகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உருவாகியுள்ளார்.

இலங்கையின் ஆயுதப் போரின் காரணமாக புலம் பெயர்ந்து இங்கிலாந்தில் குடியேறிய தம்பதிக்கு, கிழக்கு லண்டனில் பிறந்தவர் உமா குமரன்.

குயின் மேரியில் தனது கல்வியை தொடர்ந்த  அவர், ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போவ் பகுதியில் வசித்து வருகிறார்.

தற்போதைய லண்டன் மேயர் சாதிக் கானுக்காகவும், மிக சமீபத்தில் உலகளாவிய காலநிலை அமைப்பின் ராஜதந்திர உறவுகளின் இயக்குநராகவும் உமா குமரன் பணியாற்றியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை, விஞ்ஞானிகள் மற்றும் காலநிலை தலைவர்களுடன் இணைந்து உலகெங்கிலும் உள்ள துணிச்சலான காலநிலை நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.

எனினும் இன்னொரு ஈழத்தமிழ் பூர்வீக வேட்பாளரான கிறிஷ்னி ரிசிகரன் லிப்டெம் எனப்படும் தாராளவாத ஜனநாயக கட்சியிடம் வெற்றிவாய்ப்பை தவறவிட்டுள்ளார்.

எனினும் அவருக்கு 8M430 வாக்குகள் கிட்டியுள்ளன. இதேபோல 2015 ஆம் ஆண்டு முதல் பிரிஸ்டல் மேற்குத்தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய இன்னொரு ஈழத்தமிழர் சார்பு முகமான தங்கம் டெபோனைர், பசுமைக்கட்சியிடம் வெற்றிவாய்பபை தவறவிட்டுள்ளார்.

எனினும் தங்கம் டெபோனருக்கு 14,132 வாக்குகள் கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.