பேருந்தை செலுத்திக்கொண்டிருந்த சாரதி பலி.

சாரதிக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதுடன், அதன் சாரதி தமது ஆசனத்திலேயே மரணமானதாக மத்தேகொட காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கொட்டாவ – பிலியந்தலை 342 வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் இந்த பேருந்து நேற்று தனது முதல் பயணத்தை ஆரம்பிப்பதற்காக கொட்டாவ பேருந்து நிலையத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது, மத்தேகொட பிரதேசத்தில் வைத்து அதன் சாரதிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அந்த சந்தர்ப்பத்தில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

வீதியை விட்டு விலகிய பேருந்து, அருகிலிருந்து வீடொன்றின் மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. அதன்போது, குறித்த வீட்டினுள் தம்பதியொன்றும், அவர்களது பிள்ளையும் இருந்துள்ளனர்.

பேருந்து வீட்டுக்குள் தொடர்ந்தும் பயணித்திருந்தால் மேலும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் உயிரிழந்த நபர் கஹதுடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய  கபில பெரேரா என்பவரென காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் மத்தேகொட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்  .