போதைப் பொருளுக்காக சிறுவனை கடத்திய பெண்.

கொள்வனவு செய்யப்பட்ட போதைப்பொருளுக்காக பணம் செலுத்தாமை காரணமாக 10 வயது சிறுவனை கடத்திச் சென்ற சம்பவம் நீர்கொழும்பில் பதிவாகியுள்ளது.

நீர்கொழும்பில் உள்ள வர்த்தகர் ஒருவரின் புதல்வர் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

தமது வர்த்தகத்திற்காக அவர் கிராண்ட்பாஸ் பகுதியிலுள்ள பெண் ஒருவரிடம் இருந்து போதைப்பொருட்களை கொள்வனவு செய்துள்ளார்.

அதற்காக செலுத்த வேண்டிய பணம் தாமதமானதன் காரணமாக குறித்த பெண், வர்த்தகரின் 10 வயதான பேரனை கடத்திச் சென்று, கிராண்ட்பாஸ் ரந்திய உயன பகுதியிலுள்ள வீடமைப்பு தொகுதியில் தடுத்து வைத்துள்ளார்.

அத்துடன், வர்த்தகரை தொடர்புக் கொண்டு அவரது மகன் பெற்றுக் கொண்ட போதைப்பொருளுக்கான பணத்தை செலுத்துமாறு குறித்த பெண் கோரியுள்ளார்.

இதன்போது, கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவல்களுக்கமைய, காவல்துறை விசேட அதிரடிப்படையினர் குறித்த சிறுவன் தடுத்து வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு சென்று சிறுவனை பாதுகாப்பாக மீட்டனர்.

இதனையடுத்து சிறுவனை கடத்தியதாக கூறப்படும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண் கிராண்ட்பாஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.