மட்டக்களப்பில் விபத்து : ஒருவர் பலி

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் உள்ள குருக்கள் மடத்தில் சனிக்கிழமை (01) மாலை இடம்பெற்ற விபத்தில் ஸ்தலத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் களுதாவளை பகுதியை சேர்ந்த 18 வயதுடையவர் ஆவார்.

காயமடைந்தவர் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரான்குளம் பகுதியிலிருந்து இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் ஒன்றில் களுதாவளை நோக்கிச் சென்றுள்ளனர். 

மிகவும் வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் குருக்கள்மடம் வளைவுப் பகுதியில் இருந்த மின்கம்பத்தில் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் பெரும் சேதமடைந்துள்ளதாகவும் களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.