மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை பொறுப்புக்கூற வேண்டும் – கனேடிய பிரதமர்

பாதிக்கப்படக்கூடிய சமூகங்களிற்கு எதிரான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து இலங்கை பொறுப்புக்கூற வேண்டும் என கனடா தொடர்ந்தும் கோருவதாகக் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கறுப்பு ஜூலையின் 41வது ஆண்டை நினைவுகூரும் வகையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

41 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையின் கொழும்பில் தமிழ் பொது மக்களின் வர்த்தக நிலையங்களை இலக்குவைத்து தாக்குதல்கள் ஆரம்பமாகின.

ஆயிரக்கணக்கான உயிர்கள் இழக்கப்பட்டதுடன், பல தமிழர்கள் காயமடைந்தனர்.

பலர் நாட்டிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

கறுப்பு ஜூலை எனப்படும் தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரம், பதற்றங்களை அதிகரித்தது.

அது பின்னர் பல தசாப்தகால ஆயுதமோதலாகப் பரிணமித்தது.

இலங்கையின் வரலாற்றில் மிகவும் இருண்ட அத்தியாயமாக அது விளங்குகின்றது.

இதனடிப்படையில் மே 18ஆம் திகதியைத் தமிழர் இனப்படுகொலை நினைவேந்தல் தினமாக அங்கீகரிக்கும் தீர்மானத்தைக் கனடாவின் நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டு நிறைவேற்றியது.

இது அர்த்தமற்ற வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தப்பிப்பிழைத்தவர்களை நினைவுகூர்வதில் கனடாவின் அர்ப்பணிப்பை வெளிக்காட்டுவதாகக் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.