மாவீரர் துயிலும் இல்லத்தினை அபகரிப்பதற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்.

மட்டக்களப்பு கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் வித்துடல்களுக்கு மேலாக மேற்கொள்ளப்படும் மர நடுகைக்கு எதிராக இன்று பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் அங்கு நடப்பட்ட பெயர்ப் பலகை மற்றும் மரக்கன்றுகளும் பிடுங்கி எறியப்பட்டன.

மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டு குழுவின் தலைவர் லவக்குமார் தலைமையில்  இன்று காலை 10 மணியளவில் தரவையில் இந்த கண்டனம் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தரவை மாவீரர் துயிலும் இல்லமானது மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதானமான மாவீரர் துயிலும் இல்லமாக கருதப்படுகின்றது.

தொடர்சியாக கார்த்திகை 27ம் நாளில் மாவீரர் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் குறித்த மாவீரர் துயிலும் இல்லத்தினை ஆக்கிரமிக்கும் நோக்குடன் இராணுவமும், அரச புலனாய்வு துறையும் இணைந்து மரநடுகை என்ற போர்வையில் மேற்கொண்ட இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இராணுவத்தினரால் நடப்பட்டிருந்த பெயர் பலகை அகற்றப்பட்டு வன இலாகா தினைக்களத்தின் புதிதாக பெயர் பலகை இடப்பட்ட நிலையில் போராட்டக்காரர்களால் நேற்று அந்த பெயர்ப் பலகையும் உடைத்தெரியப்பட்டுள்ளதுடன் அங்கு நடப்பட்ட மரக்கன்றுகளும் பிடுங்கியெறியப்பட்டன.

குறித்த மாவீரர் துயிலும் இல்லத்தினை அபகரிப்பதற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் குறித்த மாவீரர் துயிலும் இல்லத்தினை மக்களிடம் வழங்க கோரியும், இராணுவத்தினரை பிரதேசத்தில் இருந்து  வெளியேறுமாறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதன்போது மாவீரர் துயிலும் இல்லத்தினை அபகரிக்கும் செயற்பாட்டிற்கு எதிராக கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தமிழ் தரப்புகள் மாவீரர் துயிலும் இல்லங்களை விடுவிப்பது குறித்து உறுதியான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைத்தனர்.