மின் பாவனையாளர்களிடமிருந்து அறவிடப்பட்ட மேலதிக பணம்!

இலங்கை மின்சார சபை கடந்த ஐந்து மாத காலப்பகுதியில் மாத்திரம் 9000 கோடி ரூபா மேலதிக வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும், இக்காலப்பகுதியில் மின்பாவனையாளர்களிடமிருந்து மேலதிகமாக 12000 ரூபா அறவிடப்பட்டுள்ளது எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க( Patali Champika Ranawaka ) குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (06.06.2024) இடம்பெற்ற மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மின்சார சபையை 12 கூறுகளாகப் பிரித்து அவற்றைத் தனியார் தரப்பினருக்கு வழங்கும் இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும்.

அரச சேவை தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்பது தற்போது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது 1200 அரச நிறுவனங்கள் காணப்படுகின்றன. 100 ஆண்டுகளுக்கு முன்னர் 10 அரச நிறுவனங்கள் மாத்திரமே இருந்தன. அரச நிறுவனங்களின் மொத்த செயலாற்றுகை தொடர்பில் மதிப்பாய்வு செய்ய வேண்டும்.

நட்டமடையும் அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். நட்டமடையும் அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது.

ஆனால் மறுசீரமைப்பின் போது கடைப்பிடிக்க வேண்டிய வெளிப்படைத்தன்மை மற்றும் பொது கோட்பாடுகள் தொடர்பில் நாணய நிதியம் முன்வைத்த பொதுவான அறிவுறுத்தல்களை அரசாங்கம் கடைப்பிடிக்கவில்லை“ என்றார்.