யாழில் அவசர காவு வண்டி மீது தாக்குதல்.

யாழ்.பருத்தித்துறை – அல்வாய் வடக்கு பகுதியில் இரு வன்முறை கும்பல்களுக்கிடையில் நேற்றிரவு இடம்பெற்ற மோதலில் காயமடைந்தவர்களை ஏற்றிச் சென்ற அவசர காவு வண்டி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், உயிர்காப்பு பணியாளா்கள் அச்சுறுத்தப்பட்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

நேற்றிரவு 11 மணியளவில் இரு வன்முறை கும்பல்களுக்கிடையில் வாள்வெட்டு மோதல் இடம்பெற்றுள்ளது.

இதில் பலர் காயமடைந்த தகவல் வழங்கப்பட்ட நிலையில் 1990  அவசர காவு வண்டி  சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு ஏற்றிச் சென்றுள்ளது.

இதன்போது  அவசர காவு வண்டியை வழிமறித்த காடையர்கள்  அவசர காவு வண்டி  மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன், வண்டியிலிருந்த உயிர்காப்பு பணியாளா்களை கடுமையாக அச்சுறுத்தியுள்ளனர். எனினும் அவசர காவு வண்டி  அங்கிருந்து நோயாளர்களை ஏற்றிக்கொண்டு வைத்தியசாலைக்கு சென்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.