யாழில் மதுபானம் தேயிலைச் சாயமாக மாற்றம்!

யாழ்ப்பாணம் , நெடுந்தீவு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட மதுபானம், தேயிலை சாயமாக மாறியது தொடர்பில் ஊர்காவற்துறை நீதிமன்ற உத்தரவில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு பகுதியில் அளவுக்கு அதிகமான மதுபான போத்தல்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் நெடுந்தீவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிராக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அதன் போது, நெடுந்தீவு பொலிஸாரினால் சந்தேக நபரிடம் இருந்து மீட்கப்பட்ட மதுபான போத்தல்கள் சீல் வைக்கப்பட்டு, சான்று பொருட்களாக மன்றில் ஒப்படைக்கப்பட்டது.

வழக்கு விசாரணைகளின் போது, தன் மீதான குற்றச்சாட்டினை சந்தேக நபர் ஏற்றுக்கொண்டதை, அடுத்து அவருக்கு தண்டம் விதித்த மன்று, நபர் ஒருவர் 10 மதுபான போத்தல்களை உடைமையில் வைத்திருக்க முடியும் என்பதால் அவரிடம் இருந்து மீட்கப்பட்ட மதுபான போத்தல்களில் 10 போத்தல்களை மீள கையளிக்குமாறும் மேலதிக போத்தல்களை அழிக்குமாறும் மன்று உத்தரவிட்டது.

அதனை அடுத்து சான்று பொருளாக மன்றில் ஒப்படைக்கப்பட்ட மதுபான போத்தல்களில் 10 போத்தல்களை மீள அந்நபரிடம் ஒப்படைத்த போது, அவற்றில் சில போத்தல்களில் மதுபானத்தின் நிறம் மாறி இருந்ததுடன் அடியில் மண்டி படிந்த மாதிரி காணப்பட்டுள்ளது.

அதனை அடுத்து அது தொடர்பில் நீதிமன்ற பதிவாளரிடம் முறையிட்டுள்ளார். 

பதிவாளர் எழுத்து மூல முறைப்பாட்டினை பெற்று நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றதை அடுத்து நீதவானின் உத்தரவில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.